விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வந்தவர் நிர்மலா தேவி. இவர் அந்த கல்லூரியில் பயிலும் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்த முயற்சித்ததன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்துகொண்டு இருக்கிறது.
இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக கல்லூரியின் பேராசிரியர்கள் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இந்த பிரச்சனை தொடர்பான வழக்கானது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த பிரச்சனை குறித்த வழக்கானது (29.01.2019) விசாரணைக்கு வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட முவரும் பலத்த காவல் துறையினரின் பாதுகாப்புடன் திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு சமர்பிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, தனக்கு பலமுறை ஜாமீன் வேண்டும் என்று மனு அளித்து இருந்தார். இந்த மனு மீதான ஒவ்வொரு விசாரணையின் போதும், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நிர்மலா தேவியை நாளை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் அறையில் ஆஜர்படுத்த வேண்டும் என்று காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, நிர்மலாதேவி தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நிர்மலா தேவி தொடர்பான வழக்குகளும், அவர் ஜாமீன் வழக்குகளும் நாளை விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.