நாடு முழுவதும் அமுலுக்கு வந்த நடவடிக்கை..!

17-வது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது.

தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதுடன் தேர்தல் விதிகளை அரசியல் கட்சிகள் பின்பற்றி நடக்கின்றனவா என்பதை கண்காணிக்கும் பொறுப்பும், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முன்புள்ள சவாலான பணியாகும்.

தலைமைத் தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகளுக்கு கட்டுப்பட்டாக வேண்டிய கட்டாயத்திற்கு அரசியல் கட்சிகள் ஆளாகியிருப்பதுடன், விதி மீறல்கள் நடந்தால் அதற்குரிய தண்டனையை எதிர்கொள்ளவும் நேரிடுகிறது.

எனவே, தேர்தல் நடைமுறைகள் தொடங்கியதும் அரசியல் கட்சிகள் தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றத் தொடங்கிவிடுகின்றன.

  1. தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு, தேர்தல் முடியும் வரை, ஆட்சியில் உள்ள அரசு புதிய நலத் திட்டங்களை அறிவிக்கக் கூடாது.
  2. அரசு ஊழியர்களையோ, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளையோ பணியிட மாற்றம் செய்யக் கூடாது.
  3. பதவி உயர்வும் அளிக்கக் கூடாது. வேறு வழியில்லை என்றால், தேர்தல் ஆணைய ஒப்புதல் பெற்ற பிறகு இடமாற்றமோ, பதவி உயர்வோ வழங்கலாம்.
  4. அரசு விழாக்களில் அமைச்சர்கள் வாக்கு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது.
  5. அரசு ஊழியர்களையோ, அரசு வாகனங்களையோ பரப்புரைக்கு பயன்படுத்தக் கூடாது.
  6. பொது மைதானங்கள், ஹெலிபேட் போன்றவற்றைப் பயன்படுத்த அனுமதிப்பதில் கட்சி பேதம் பார்க்கக் கூடாது. வாக்குச்சாவடிக்கோ, வாக்கு எண்ணும் இடத்திற்கோ அமைச்சர்கள் செல்ல அனுமதியில்லை.
  7. வேட்பாளராகவோ, வாக்காளராகவோ அல்லது கட்சியின் அதிகாரப்பூர்வ ஏஜெண்டாகவோ இருந்தால் மட்டுமே குறிப்பிட்ட அந்த இடங்களுக்கு அமைச்சர்கள் செல்லலாம்.
  8. சாதி, மத, மொழி மற்றும் இன ரீதியாக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பரப்புரையில் ஈடுபடக் கூடாது.
  9. கோவில், மசூதி, தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பரப்புரை செய்யக்கூடாது.

இது போன்ற இன்னும் பல விதிகள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.