தனியார் பள்ளி ஆசிரியர் வெட்டி படுகொலை!

கோவில்பட்டி அருகே தனியார் பள்ளி ஆசிரியர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஆத்திக்கிணறு கிராமத்தை சேர்ந்தவர்  கணேசமூர்த்தி (32). இவருக்கு திருமணமாகி கமலாதேவி என்ற மனைவியும், கவின் சேகுரா (6), மதிவதினி (5) என்ற 2 குழந்தைகளும் உள்ள நிலையில், பட்டதாரியான கணேசமூர்த்தி, சில்லாங்குளத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் கோவில்பட்டியை அடுத்துள்ள பாண்டவர்மங்கலம் சந்திப்பு பெரியார் சிலை அருகே கணேசமூர்த்தி வந்துகொண்டிருந்தபோது சில மர்மநபர்கள் அவரை வழிமறித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கணேசமூர்த்தி அவர்களிடமிருந்து தப்பிச்செல்ல முயன்றபோது, மர்மநபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதனால் பலத்த காயமடைந்த கணேசமூர்த்தி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த கோவில்பட்டி மேற்கு போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று  கணேசமூர்த்தியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த  போலீசார், ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டதற்க்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தப்பிச்சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.