ஒரத்தநாடு அருகே உள்ள காவாரப்பட்டு தெற்கு தெருவை சேர்ந்தவர் சிகாமணி(40 ). இவருக்கும், ஒக்கநாடு மேலையூரை சேர்ந்த ரெங்கசாமி மகள் சுதாமணி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
திருமணம் ஆகிய பின்பும் சிகாமணி அடிக்கடி வெளிநாடு சென்று வருவது வழக்கம். இந்நிலையிலும் சிகாமணி அவரது மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கோபம் அடைந்த சுதாமணி, அவரது குழந்தையை அழைத்து கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அதன் பின்பும் சுதமணியின் தந்தை ரெங்கசாமி தனது மகளை கணவருடன் சேர்த்து வாழ வைக்க பல முயற்சிகள் எடுத்தாலும் எல்லாம் தோல்வியில் முடிந்துவிட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் சிகாமணி திடீரென முடிவு எடுத்தார். சிகாமணி, அவரது மனைவி வீட்டாருக்கு தெரியாமலே ஒக்கநாடு கீழையூரை சேர்ந்த சென்னையில் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்த நதியா என்பவரை 2 -வது திருமணம் செய்து கொண்டார்.
இதை அறிந்த சுதாமணி அதிர்ச்சியடைந்து, இதுகுறித்து பட்டுக்கோட்டையில் உள்ள அனைத்து மகளிர் காவல் துறையிலும் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயா வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சிகாமணி, அவரது 2-வது மனைவியான நதியா ஆகியோரை தேடி வருகின்றனர்.






