சென்னையை அடுத்த புழலை சேர்ந்தவர் தாமோதரன். இவர் சென்னை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றுகிறார். இவரது மனைவியும் மருத்துவராக உள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவர்களது வீட்டில் விருத்தாசலத்தைச் சேர்ந்த சசிகலா என்ற 17 வயது சிறுமி வேலைக்கு சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் சசிகலா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவலளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தூக்கில் தொங்கிய சசிகலாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் இந்த தற்கொலை குறித்து சசிகலாவின் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, சசிகலா 12 நாட்களுக்கு முன் டாக்டர் வீட்டில் வேலைக்குச் சேர்ந்தார். பின் எங்களிடம் நன்றாகத் தான் பேசினார்.ஆனால் தூக்கில் தொங்கிய சசிகலாவின் கால், நாற்காலியின் மீது உள்ளது. இதுதான் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளனர்.
பின்னர் இதுகுறித்து போலீசார் கூறுகையில், சசிகலாவின் செல்போனை நாங்கள் ஆய்வு செய்தபோது, சசிகலா சென்னைக்கு வேலைக்கு வருவதற்கு முன்பே ஊரில் சில பிரச்சனை இருந்துள்ளது. மேலும், அவர் குறிப்பிட்ட ஒரு செல்போன் எண்ணில் நீண்ட நேரம் பேசியுள்ளார் .
என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில் பிரேத பரிசோதனைக்கு பின்னரே சசிகலாவின் மரணம் குறித்த உண்மையான காரணம் தெரியவரும் என பொலிசார் கூறியுள்ளனர்.
மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.