வீட்டுப்பாடம் செய்யாததற்காக சிறுவனை துடைப்பத்தால் அடித்தே கொன்ற குடும்பத்தார்!

ஒன்பது வயது மாணவன் ஒருவன் வீட்டுப்பாடம் செய்யாததற்காக அவனை அவனது குடும்பத்தார் அடித்தே கொன்ற சம்பவம் பிரான்சில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு பிரான்சில் Mulhouse நகரில் வசிக்கும் அந்த சிறுவன் வீட்டுப்பாடம் செய்ய முரண்டு பிடித்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த சிறுவனின் அண்ணன் அவனை துடைப்பத்தின் பின்பக்கத்தில் உள்ள கட்டையால் பலமாக தாக்கியிருக்கிறான். அப்போது அவனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது.

அவனது குடும்பத்தினர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த மருத்துவ உதவிக் குழுவினர், சிறுவனை மீட்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைய சிறுவனின் உயிர் பிரிந்திருக்கிறது.

முதலில் அவன் மாரடைப்பால் இறந்ததாக கருதப்பட்டாலும் பிரேதப் பரிசோதனையில் அவன் தாக்கப்பட்டதாலேயே உயிரிழந்ததாக தெரியவந்ததையடுத்து, அவன் உயிரிழக்கும்போது அவனுடனிருந்த அவனது அக்கா, அண்ணன், அண்ணனின் காதலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சிறுவனின் தாயார் சம்பவம் நடந்தபோது வீட்டில் இல்லை என்றாலும், அவரும் மகனை தண்டிப்பதையே உற்சாகப்படுத்துபவர் என்று தெரியவந்துள்ளதையடுத்து அவரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.