பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலை விவகாரத்தினால், பிரான்சில் வசித்து வந்த 18 சவுதி அரேபியர்களை மீண்டும் பிரான்சிற்கு வர அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.
சமீபத்தில் துருக்கி நாட்டில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்குள், சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, சவுதி அரசு இந்த கொலை தொடர்பாக சிலருக்கு மரண தண்டனை வழங்கியது. ஆனால், சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு இந்த கொலையில் தொடர்பு உள்ளது என அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், பிரான்சில் வசித்து வந்த 18 சவுதி அரேபியர்கள் மீண்டும் தங்கள் நாட்டிற்கு நுழைய பிரான்ஸ் அரசு தடை விதித்துள்ளது. மேலும், இவர்கள் ஜமால் கசோக்கி கொலையில் தொடர்புடையவர்கள் என்று அந்நாட்டு அரசின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதே போல் ஜேர்மன் அரசும் இவர்களுக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.