சபரிமலைக்கு சென்ற இஸ்லாமியப் பெண் மத நீக்கம்

சபரிமலை கோவிலுக்கு சென்ற இஸ்லாமியப் பெண்ணை மதத்தை விட்டு நீக்குவதாக கேரள இஸ்லாமிய ஜமாத் கமிட்டி அறிவித்துள்ளது.

சபரிமலைக் கோவிலுக்கு செல்ல இளம்பெண்களுக்கு பல வருடங்களாக அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அனைத்து வயதினரும் சபரிமலைக்கு செல்லலாம் என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சபரிமலைக்கு செல்லும் பெண்களை தடுக்கும் இந்து அமைப்பினரை காவல்துறையினர் கடுமையாக தாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் சபரிமலைக்கு சமூக ஆர்வலரும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவருமான ரெஹனா பாத்திமா இருமுடி கட்டி சென்றுள்ளார். இதற்கு இஸ்லாமிய மதத் தலைமையான கேரள இஸ்லாமிய ஜமாத் கமிட்டி கடும் கண்டனம் டெரிவித்துள்ளது. இது குறித்து இந்த கமிட்டி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ”ரெஹனா பாத்திமாவின் செய்கை லட்சக்கணக்கான இந்து பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அத்துடன் அவர் ஏற்கனவே முத்தமிடும் போராட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளார். ஒரு படத்தில் நிர்வாணமாக தோன்றி உள்ளார். எனவே அவருக்கு இனி தனது இஸ்லாமிய பெயரை வைத்துக் கொள்ளவோ இஸ்லாம் மதத்தில் இருக்கவோ தகுதி இல்லை.

ஆகவே இந்த கமிட்டி அவரையும் அவர் குடும்பத்தினரையும் இஸ்லாம் மதத்தை விட்டு விலக்கி வைத்து உத்தரவிடுகிறது. மேலும் ரெஹனா மீது மாற்று மத விரோத நடவடிக்கை மேற்கொண்டதற்காக அரசு சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். அதே போல கேரள ஐஜி ஸ்ரீஜித் சமுக விரோத சக்திகளை பாதுகாப்பு பிரதேசமான சபரிமலைக்குள் அனுமதித்தற்காக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என கூறப்பட்டுள்ளது.