மைத்திரியின் இரகசிய தகவல்கள் அம்பலம்!

ஜனாதிபதியின் பாதுகாப்பு தகவல்கள் இணையதளம் ஒன்றில் வெளியானதால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா பொதுச்சபையின் 73வது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்தார். இந்த சந்தர்பத்தில் அவர் தங்கியிருந்த ஹோட்டல் உட்பட பல இரகசிய தகவல்கள் தனியார் இணையத்தளம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பில் விசாரணை ஒன்றை ஆரம்பிப்பதற்கு இரகசிய பொலிஸார் நேற்று கொழும்பு பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்கவிடம் அனுமதி பெற்றுள்ளனர்.

பாதுகாப்பு தகவல்கள் எவ்வாறு இணையத்தில் வெளியாகியது என்பது தொடர்பில் விசாரணை ஒன்று ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர், இரகசிய பொலிஸ் கணனி பிரிவிடம் அறிவித்துள்ளார்.

கடந்த மாதம் 25ஆம் திகதி ஜனாதிபதி அமெரிக்கா நோக்கி செல்வதற்கு முன்னர், 22ஆம் திகதி இரவு, புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக அரசாங்க புலனாய்வு பிரிவிற்கு தகவல் ஒன்று கிடைத்திருந்தது. அத்துடன், ஜனாதிபதி தங்கியிருந்த ஹோட்டல் தொடர்பான தகவலும், ஜனாதிபதி உட்பட குழுவினர் பயணித்த விமானத்தின் புகைப்படங்கள் உட்பட அனைத்தும் சிங்கள இணையத்தளம் ஒன்று வெளியிட்டிருந்தது.

ஜனாதிபதி தொடர்பான முக்கிய தகவல்கள் எவ்வாறு கசிந்தது என்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.