வேலூரில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த டிப்ளமோ மாணவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வேலூர் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆம்பூர் அருகே மாதனூர் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் எஸ்.பிரேம் குமார். இவர், குடியாத்தத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 2016 ஆம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்தார்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை கடந்த 2016 மார்ச் 5 ஆம் தேதி விளையாடலாம் என்று கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற பிரேம்குமார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும், இதுகுறித்து வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.எனினும், இதுகுறித்து அந்தச் சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, சிறுமியின் தாய் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி எம்.செல்வம், குற்றம்சாட்டப்பட்ட பிரேம்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து பிரேம்குமார் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.