மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும் என்று வடக்கு மாகாண சபையில் நேற்றுக் கோரிக்கை விடுக்கப்பட்டது. மஹிந்த அணி மாகாணசபை உறுப்பினர், தர்மபால சென விரட்ன சபையில் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். சபையில் ஏனைய உறுப்பினர்களும் அதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
வடக்கு மாகாண சபையின் அமர்வு நேற்று இடம்பெற்றது. அமர்வின் இறுதியில் சபையை ஒக்ரோபர் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கும் அறிவித்தலை அவைத் தலைவர் விடுத்தார். இதன்போது கருத்துத் தெரிவித்த செனவிரட்ன, நீங்கள் மாகாணசபைத் தேர்தலை உடன் நடத்தச் சொல்லி அரச தலைவர் மைத்திரிபாலவிடம் கோருங்கள் – என்றார்.
இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த ஆளும் கட்சி உறுப்பினர் அஸ்மின், மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் அதனை நடத்தும் திராணி மைத்திரிபாலவுக்கு இல்லை. நல்லாட்சி அரசு மீது தமிழ் மக்கள் படிப்படியாக நம்பிக்கையிழந்து வருகின்றார்கள்.
இப்படிப்பட்ட ஒருவருக்கு ஆதரவு கோரியதை நினைத்து வெட்கப்படுகின்றோம். சாட்டுப் போக்கு சொல்லி காலம் கடத்துகின்றார்.அவர் தனது கட்சியைப் பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
அவரின் பொருளாதாரக் கொள்கைகள் காரணமாகவே நாடு பாதாளத்துக்குப் போய்க் கொண்டிருக்கின்றது.மேற்குலக நாடுகள் இலங்கை அரசுக்கு பொருளாதார உதவி வழங்கத் தயாராக இருந்தன. தமிழர்கள் விடயத்தில் அரசின் போக்கு மாறியதும், மேற்குலக நாடுகள் இலங்கைக்கான உதவியை நிறுத்திவிட்டன – என்றார்.