குழந்தையாக அவதரித்த நாக பாம்பு? பிரசவ நேரத்தை எதிர்பார்த்த திக் திக் நிமிடங்கள்!

ஒரு பெண்ணின் வயிற்றில் நாகப்பாம்பே குழந்தையாக அவதரித்து இருக்கும் செய்தி கடந்த சில மாதங்களாக பட்டிதொட்டியெல்லாம் காட்டுத்தீயாக பரவியது. இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த செய்தி இறுதி தருணங்களை அடைந்து அனைவரையும் திக் திக் மனநிலைக்கு அழைத்து சென்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது :-

கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகேயுள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் கோகிலாவிற்கும் (45) திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த நடராஜனுக்கும் 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தும் இதுவரையில் குழந்தை இல்லை.

குழந்தை வேண்டி கோகிலா ஏராளமான கோவில்களுக்கு சென்று வேண்டி வழிபட்டு வந்தார். மேலும் கணவர் ஊரான வேடசந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற புற்று கோவிலுக்கு கோகிலா வாரந் தோறும் சென்று பிரார்த்தனை செய்துவந்தார்.

இந்நிலையில் கோகிலா கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் அடைந்ததாக உணர்ந்தார். ஒரு சில வாரங்களுக்கு பின்னர் மருத்துவ மனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்த போது கோகிலா கர்ப்பம் அடைய வில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் கோகிலாவோ அதனை ஏற்கவில்லை.

தொடர்ந்து தான் கர்ப்பம் அடைந்திருப்பதாக கூறி வந்த கோகிலா முழு நம்பிக்கையுடன் இருந்தார். தான் வாரந்தோறும் செல்லும் புற்றுக்கோவில் பூசாரியிடம் ஸ்கேனிங் ரிப்போட்டை காண்பித்துள்ளார். அதனை பார்த்த பூசாரியும் கர்ப்பத்தை உறுதி செய்ததோடு, கோகிலாவின் வயிற்றில் நாகப்பாம்பு வளருவதாகவும், நிறைந்த பவுர்ணமி நாளில் நள்ளிரவில் 12.20 மணியளவில் நாகப்பாம்பு பிறக்க உள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

ஒரு பெண்ணின் வயிற்றில் நாகப்பாம்பே குழந்தையாக அவதரித்து இருக்கும் செய்தி கடந்த சில மாதங்களாக பட்டிதொட்டியெல்லாம் காட்டுத்தீயாக பரவியது. நேற்று முன்தினம் பவுர்ணமி நாளும் வந்தது. அன்று மாலையே ஒரு கோவிலில் பூசாரி உடுக்கை அடித்து சாமி கும்பிட ஆரம்பித்துள்ளார். நாகப்பாம்பு பிறக்க போவதாக வந்த தகவலால் கோகிலாவின் வீட்டு முன்பு ஆயிரக் கணக்கானோர் திரண்டனர்.

தகவல் அறிந்த லாலாப்பேட்டை பொலிஸ் இன்ஸ் பெக்டர் கோமதி தலைமையில் ஏராளமான பொலிசார் அங்கு வந்தனர். பூசாரி சரியாக நள்ளிரவு 12.20 மணிக்கு நாகப்பாம்பு பிறக்க போவதாக சொல்லிக்கொண்டு இருந்தார்.

அந்த நிமிடத்தை எதிர்நோக்கி அனைவரும் திக், திக் என்று காத்திருந்தனர். அந்த நேரமும் வந்தது. ஆனால் குழந்தை ஒன்றும் பிறக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் கலைய தொடங்கினர்.

இதற்கிடையே பொலிசார் 108 அம்புலன்சை வரவழைத்து கோகிலாவை ஏற்றிக் கொண்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அந்த பெண் கர்ப்பமாகவே இல்லை என தெரிவித்துள்ளனர். இருப்பினும் அந்த பெண்ணின் உடலை முழுமையாக பரிசோதித்து சிகிச்சை மேற் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் மதுரை மருத்துவமனைக்கு கோகிலா அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் லாலாப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.