திருகோணமலை துறைமுகத்தில் ஜப்பானின் நாசகாரி

ஜப்பானியக் கடற்படையின் “இகாசுச்சி” (Ikazuchi) என்ற நாசகாரிப் போர்க்கப்பல் நல்லெண்ணப் பயணமாக நேற்று திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

ஜப்பானிய நாசகாரிக் கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து, ஜப்பானிய நாசகாரிக் கப்பலின் கட்டளை அதிகாரியான கப்டன் யோகோ அசுமா, இலங்கை கடற்படையின் கிழக்குப் பிராந்திய கட்டளை அதிகாரிகளைச் சந்தித்து இருதரப்பு உறவுகள், மற்றும் பயிற்சிகள் குறித்து கலந்துரையாடினார்.

மூன்று நாட்கள் திருகோணமலைத் துறைமுகத்தில் தரித்து நிற்கவுள்ள ஜப்பானிய நாசகாரியில் உள்ள மாலுமிகள், இலங்கை கடற்படையினர் ஏற்பாடு செய்யும் நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளனர்.

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் முதல்முறையாக இலங்கைக்கு வந்துள்ள நிலையில், ஜப்பானிய நாசகாரியும் திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.