எண்ணெய்க்குளியல்!

‘சனி நீராடு’ என்பார்கள். நீங்கள் நீராடுவதோடு, உங்கள் பிள்ளைகளையும் நீராடச் செய்யுங்கள். உச்சந்தலையில் உள்ளங்கை அளவு நல்லெண்ணெயை 10 நிமிடங்கள் ஊறவிட்டு, அரப்பு, சீயக்காய் அல்லது ஹெர்பல் ஷாம்புவால் தலைக்கு ஊற்றிவிடுங்கள். உச்சி வெயிலில் கிரிக்கெட், சைக்கிள் சுற்றல் என 6 நாள்களாகப் பிள்ளையின் உடம்பில் சேர்ந்திருந்த அத்தனை சூடும் தணிந்து, ஆரோக்கியமாக இருப்பார்கள். இப்படி எண்ணெய்க்குளியல் எடுத்த நாளில், பிள்ளைகளுக்கு சில உணவுகளை நிச்சயம் தர வேண்டும். சில உணவுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். அவை என்ன? அம்மாக்களுக்கு டிப்ஸ் தருகிறார், சித்த மருத்துவர் வேலாயுதம்.

எண்ணெய்க்குளியல்

”எண்ணெய்க் குளியலை வெதுவெதுப்பான நீரில்தான் எடுக்க வேண்டும். குளிர்ந்த நீர் கூடவே கூடாது. வெதுவெதுப்பான நீர்தான், தோலில் இருக்கும் துளைகளைத் திறந்து அழுக்கை உடைத்து வெளியேற்றும். எண்ணெய்க்குளியல் செய்த நாளில், பிள்ளைகளின் உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேறிக்கொண்டிருப்பதால், உடம்பு அசதியாக இருக்கும். எனவே, எளிதில் செரிக்கக்கூடிய லேசான உணவுகளை மட்டுமே தர வேண்டும். மசாலாக்கள் நிறைந்த மற்றும் உடலை மந்தமாக்கும் உணவுகள் கூடவே கூடாது.

மருத்துவர் வேலாயுதம்     எண்ணெய்க் குளியல் செய்த நாளில் நல்ல ஓய்வு அவசியம். விடுமுறைதானே எனப் பிள்ளைகளை வெயிலில் அழைத்துச் செல்லாதீர்கள். உடம்பு அசதியாக இருப்பதால், சோர்ந்து போய்விடுவார்கள். அதேநேரம், அந்த நாளில் ஓய்வாக இருக்கட்டும் எனப் பகல் தூக்கமும் கூடாது. எண்ணெய்க் குளியலுக்குப் பிறகு உடம்பில் இருக்கும் சூடு வெளியேறிக்கொண்டிருக்கும். இந்த நேரத்தில் தூங்கினால், மறுபடியும் உடம்பில் சூடு அதிகமாகும்” என்கிற வேலாயுதம், அன்றைக்குச் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகளைப் பட்டியலிடுகிறார்.

‘சாப்பிட வேண்டிய உணவுகள்…

* காலையில் ஆவியில் வெந்த இட்லி, இடியாப்பம், நன்கு வேக வைக்கப்பட்ட தினைக்கஞ்சி, கேழ்வரகுப் புட்டு, அரிசிப்புட்டு, ஆப்பம்… இவற்றுக்குத் தொட்டுக்கொள்ள பனங்கற்கண்டு சேர்த்த தேங்காய்ப்பால், பொட்டுக்கடலைச் சட்னி, இஞ்சித் துவையல் ஆகியவற்றைத் தரலாம்.

*  மதியம் வரகரிசி சாதம், சுண்டைக்காய் வற்றல் குழம்பு, மணத்தக்காளி வற்றல் குழம்பு, வெந்தயக்குழம்பு, மிளகு ரசம், பிரண்டைத் துவையல், கறிவேப்பிலைத் துவையல், கொத்தமல்லித் துவையல் ஆகியவற்றைக் கொடுக்கலாம்.

* உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேறுவதால், அதைச் சரியாக செய்ய நார்ச்சத்து நிறைந்த கீரைகள் மற்றும் காய்கறிகளை சிறிதளவு தேங்காய்த்துருவல் சேர்த்துக் கொடுங்கள்.

* எண்ணெய்க் குளியலுக்குப் பிறகு உடலில் இருக்கும் தேவையில்லாத சூடு மெல்ல மெல்ல வெளியேறுவதால், சூட்டை வேகமாகத் தணிக்க மோர் சாதம் கொடுக்கலாம்.

* இரவில் இட்லி மாதிரியான லேசான உணவு அல்லது, ஒரு நாட்டு வாழைப்பழம் கொடுக்கலாம். பிள்ளைகள் எதுவுமே சாப்பிட மாட்டேன் என்றால், ஒரு கப் பசும்பாலில் ஒரு சிட்டிகை வீட்டில் அரைத்த மஞ்சள்பொடி, தேவையான பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கக் கொடுக்கலாம்.

உணவு

சாப்பிடக்கூடாத உணவுகள்…

* பிள்ளைகளுக்குக் காலையில் பால் கொடுக்கும் வழக்கம் இருந்தால், எண்ணெய்க் குளியல் நாளில் தவிர்த்துவிடுங்கள். பால், செரிமானமாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். உடம்பானது, கழிவுகளை வெளியேற்றும் வேலையை விட்டுவிட்டு பாலை செரிக்கவைக்கும் வேலையைச் செய்ய ஆரம்பித்துவிடும்.

* தயிர் வேண்டாம். சீதளத்தைத் தூண்டிவிட்டு சளிப் பிடிக்க வைத்துவிடும்.

* தலைக்குக் குளித்த நாளில் நெய், பருப்பு மற்றும் அசைவ உணவுகள் வேண்டவே வேண்டாம். உடலை மந்தமாக்கிவிடும். இவையும் செரிமானமாக நிறைய நேரம் எடுத்துக்கொள்ளும். ஏற்கெனவே அசதியாக இருக்கும் உடம்பு இன்னும் சோர்ந்து போய்விடும்.

* காய்கறிகள் தரலாம் என்றாலும், அதில் மசாலாவும் தேங்காயும் அரைத்துவிட்ட குருமா வேண்டாம். புளித்த ஏப்பம், மந்தம், நெஞ்செரிச்சல் எனப் பிரச்னைகளை ஏற்படுத்திவிடும்.

ஆப்பம்

எண்ணெய்க்குளியல் எடுத்த அன்று மேலே சொன்னவற்றை ஃபாலோ செய்தால், உங்கள் பிள்ளைகள் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள்!