ஒரே பெண்ணை காதலித்த இருவர்…. கடைசியில் நிகழ்ந்த விபரீதம்

இந்திய மாநிலமான தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே இளைஞர் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் உடன் பணிபுரிந்த நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திசையன்விளை காட்டுப் பகுதியில் இளைஞர் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரது மர்ம உறுப்பும் அறுக்கப்பட்டு இருந்துள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தட்டார்மடம் பொலிசார் விசாரணை நடத்துகையில், கொல்லப்பட்டவர் திசையன்விளையைச் சேர்ந்த 22 வயதேயான இளைஞர் முத்துபட்டுராஜ் என்பது தெரிய வந்தது.

திசையன்விளையில் முத்துபட்டுராஜ் பணிபுரிந்து வந்த இனிப்புகள் விற்பனைக் கடையில் பொலிசார் விசாரித்த போது கொலைக்கான காரணம் குறித்த முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழத் தொடங்கின. திசையன்விளையைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் சுபாஷ் ஆகியோர், முத்துபட்டுராஜூடன் அதே கடையில் பணிபுரிந்துள்ளனர்.

அப்போது ஏற்கெனவே திருமணமான சுரேசுக்கு ஒரு பெண் மீது காதல் ஏற்பட்டதாகவும், அதே பெண்ணை முத்துபட்டுராஜூம் காதலித்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்படவே சுபாசும், சுரேசும் சேர்ந்து முத்துபட்டுராஜூக்கு மிரட்டல் விடுத்ததாகவும் பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து திசையன்விளை காட்டுப் பகுதியில் தலைமறைவாக இருந்த சுரேசையும், சுபாசையும் பிடித்த பொலிசார் விசாரணை நடத்தியதில் கொலை செய்ததை இருவரும் ஒப்புக் கொண்டனர்.

காதல் கைகூடாமல் போய் விடுமோ என்கிற அச்சத்திலும், ஏற்கெனவே நடைபெற்ற சண்டைக்கு பழிதீர்க்கும் விதத்திலும் கொலை செய்ததாக சுரேஷ் கூறியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இரவு வேலை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த முத்துபட்டுராஜை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி காட்டுப் பகுதிக்கு வரவழைத்ததாகவும், அப்போது மது அருந்திய தாங்கள் இருவரும் கட்டையால் முத்துபட்டுராஜின் முகத்தில் அடித்து கொலை செய்த பின்னர், மர்ம உறுப்பை அறுத்ததாகவும் தெரிவித்ததாக பொலிசார் தரப்பில் கூறப்படுகிறது. சுரேசையும், சுபாசையும் கைது செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.