எனது முடிவுகளினால் சிலர் அதிர்ச்சியடைவது உண்மை – ஜனாதிபதி

எனது முடிவுகளினால் சிலர் அதிர்ச்சியடைவது உண்மை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் ஈரானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தெஹ்ரானில் உள்ள விடுதியில் ஓய்வாக இருந்த போதே ஊடகவியலாளர்களிடம், தாம் தெஹ்ரானுக்கு வருவதை ‘அவர்கள்’ தடுக்க முனைந்தார்கள் என்று, குறிப்பிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக மைத்திரிபால சிறிசேன குறித்த ஊடகவியலாளருக்கு தெரிவித்த கருத்தில்,

தமக்கு அழுத்தம் கொடுத்தது கொழும்பை தளமாக கொண்ட மேற்குலக இராஜதந்திரிகளா, உள்ளூர் அதிகாரிகளா அல்லது இருதரப்பினருமா என்பதை அவர் குறிப்பிடப்படவில்லை.

“எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது இது தான் முதல் தடவை அல்ல. எமது நாடு இறைமையுள்ள நாடு. நாட்டுக்கு எது நல்லது என்று நாங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

ஈரானுக்குப் போகக் கூடாது என்ற கோரிக்கைகளை நான் செவிசாய்க்கவில்லை. கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் கட்டாருக்குப் பயணம் மேற்கொள்ளவிருந்த போதும், இதேபோன்ற அழுத்தத்தை சந்தித்தேன். அங்கு போகக் கூடாது என்று நான் கேட்கப்பட்டேன்.

அதனை நிராகரித்து விட்டு, அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டேன். இன்று கட்டார் அமீர் இலங்கையின் நல்ல நண்பராக இருக்கிறார். மற்றொரு சந்தர்ப்பத்தில், கடந்த மார்ச் 22 ஆம் நாள், மூன்று நாட்கள் பயணமாக பாகிஸ்தானுக்குச் செல்ல முயன்ற போதும், எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

பாகிஸ்தானின் குடியரசு நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக் கொண்டிருந்தேன். எனது அந்த முடிவினால் சிலர் அதிர்ச்சியடைந்திருந்தனர் என்பது எனக்குத் தெரியும்.

நான் சரியான முடிவையே எடுத்தேன் என்பதில் உறுதியாக இருந்தேன்.” என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இதேவேளை ஜனாதிபதியின் இந்த முயற்சிகளை யார் தடுக்கிறார்கள் என்ற விபரம் குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை.