பெண் சிப்பாய்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட நபர்!

அமெரிக்கக் கடற்படையின் பெண் சிப்பாய்களிடம் சில்மிசம் செய்ய முயன்ற ஒருவரை உப்புவௌி பொலிசார் நேற்றுக் கைது செய்துள்ளனர்.

அமெரிக்கக் கடற்படையின் மருத்துவப் பிரிவைச் சேர்ந்த யூஎஸ்என் மெர்சி கப்பல் கடந்த ஏப்ரல் 25ம் திகதி தொடக்கம் திருகோணமலையில் நிலைகொண்டுள்ளது.

இதில் வந்துள்ள பணியாளர்கள் கடந்த சில நாட்களாக அப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் சமூக சேவை விடயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த கப்பற்படையின் பெண் சிப்பாய்கள் இரண்டு பேர் திருகோணமலை உப்புவௌி பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர்களின் கோரிக்கையின் பேரில் குளிர்பானம் எடுத்துக் கொண்டு அவர்கள் தங்கியிருந்த அறைக்குச் சென்ற ஹோட்டல் சிப்பந்தி பெண் சிப்பாய்களிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்து சில்மிசம் செய்துள்ளார்.

இதன் பின்னர் பெண் சிப்பாய்கள் அதுகுறித்து ஹோட்டல் நிர்வாகத்துக்கு முறைப்பாடு செய்து பொலிசாருக்கு அறிவித்துள்ளனர்.

பொலிசாரின் விசாரணையின் பின்னர் முல்லைத்தீவைச் சேர்ந்த சந்தேக நபரை உப்புவௌிப் பொலிசார் நேற்றுக் கைது செய்துள்ளனர்.

இதே போன்ற இன்னுமொரு சம்பவம் உப்புவௌி பிரதேசத்தின் இன்னுமொரு ஹோட்டலில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றுள்ளது.

அங்கு தங்கியிருந்த பிரிட்டிஷ் பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்ற சந்தேக நபர் ஒருவர் பின்னர் தப்பிச் சென்றிருந்தார்.

எனினும் ஹோட்டல் சீசிடிவியின் உதவியுடன் குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த சிங்கள வாலிபர் ஒருவர் நேற்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார்..