சொந்த சகோதரனை இழந்துவிட்டேன்: நடிகர் விஷால் கண்ணீர்

என் சொந்த சகோதரனை இழந்துவிட்டேன் என்று பார்கவ் மரணம் குறித்து நடிகர் விஷால் கண்ணீருடன் டுவிட் செய்துள்ளார்.

பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரான கோபால் ரெட்டியின் மகன் பார்கவ்வின் உடல் இன்று நெல்லூரில் உள்ள வகடா கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது.

1980 மற்றும் 1990-களில் அதிக படங்களை தயாரித்தவர் தான் கோபால் ரெட்டி. தன் மகனான பார்கவ் பெயரில் பார்கவ் ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்து வரும் இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இவரது மகன் பார்கவ் நேற்று முன் தினம் நெல்லூரில் உள்ள இறால் பண்ணைக்குச் சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் வீடு திரும்பாத நிலையில், இன்று காலையில் அவரது உடல் வகடா கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது.

இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பிரபல திரைப்பட நடிகர் விஷால் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், என் சொந்த சகோதரனை இழந்துவிட்டேன்.

இந்த குற்ற உணர்வில் இருந்து என்னால் வெளிவரவே முடியாது. நான் உன்னை இழந்துவிட்டேன். ஏன் இப்படி, உன் பிரச்சனைகளை நான் தீர்த்து வைத்திருப்பேனே. இந்த செய்தியை எழுதும் போதே அழுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.