அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து சிரியா மீது நேற்று தாக்குதல் நடத்தியுள்ளன.
போர்க் கப்பல்களில் இருந்து இயக்கப்படும் தன்னியக்க வழிகாட்டு ஏவுகணைகள் மற்றும் போர் வானூர்திகள் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
சிரியாவில் நடந்துவரும் உள்நாட்டுப் போரில் அந்த நாட்டு அரசு இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி வருகின்றது என்று குற்றஞ்சாட்டி அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சிரியாவில் பதவியில் உள்ள அதிபர் அல் அசாத்தின் ஆட்சிக்கு ரஷ்யா தொடர்ந்தும் உறுதியான ஆதரவு வழங்கிவருகின்றது.
பதிலுக்கு சிரிய அரசை எதிர்த்துப் போராடும் கிளர்ச்சிக் குழுக்களுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றது.
கடந்த 4 வருடங்களாக சிரியாவில் உள்நாட்டுப் போர் தீவிரமாக நடந்து வந்தாலும் அதில் எந்தத் தரப்பும் உறுதியான வெற்றியைப் பெறுவதாக இல்லை. அப்பாவி மக்களின் உயிர்களே அநியாயமாகப் பறிக்கப்பட்டு வருகின்றன.
கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தாக்குதல்களில் அப்பாவி மக்களின் உயிர்களைப் பற்றிக் கவலைப்படாமல் வேதியல் குண்டுகளையும் வீசி சிரிய அரசு அப்பாவி மக்களையும் கொன்று வருகின்றது என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து கூறப்பட்டு வருகின்றது. ஆனால் சிரிய அரசு அதனைத் தொடர்ந்து மறுத்து வருகின்றது.
அலப்போவிலும் தொடர்ந்து கவுட்டா, டௌமா நகரங்களிலும் வேதியல் குண்டுகள் வீசப்பட்டதில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு மனித உரிமைகள் அமைப்புகளால் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
இதனையடுத்தே சிரியாவின் வேதியல் ஆயுதக் கிடங்குகள் மற்றும் வேதியல் ஆயுதங்கள் தயாரிக்கப்படும் இடங்கள் என்று சந்தேகிக்கப்படும் பகுதிகளின் மீது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் படைகள் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
இந்தத் தாக்குதல் தொடர்ந்து நடத்தப்படமாட்டாது என்றும் சிரிய அரசு, எச்சரிக்கையையும் மீறி வேதியல் ஆயுதங்களைப் பயன்படுத்தியதன் விளைவாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் மீண்டும் இதுபோன்ற வேதியல் தாக்குதல்கள் நடத்தப்பட்டால் அப்போது மேற்கொண்டு எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் பிரான்ஸ் அதிபர் மக்ரோன் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலுக்கான விளைவு நிச்சயம் இருக்கும் என்றும் அதற்கு அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளே பொறுப்பு என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள ரஷ்யத் தூதர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
சிரியா விடயத்தில் மேற்கு நாடுகளும் ரஷ்யாவும் மிகத் தெளிவாக எதிர் எதிர்த் திசைகளில் நின்று போரிடுவது புலனாகின்றது. இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உருவான பனிப் போரை நினைவுபடுத்துகின்றது.
1991இல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் பனிப்போர் முடிவுக்கு வந்ததாகக் கருதப்பட்டாலும் நீறு பூத்த நெருப்பாகக் கனன்று வந்த அது இப்போது அப்பட்டமாக வெளிப்பட ஆரம்பித்திருக்கின்றது.
‘‘பழிவாங்கும் எண்ணத்தோடு பனிப்போர் மனப்பான்மை திரும்பி வந்துள்ளது’’ என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்ரணியோ குத்தேர்ஸ்சும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
‘‘ஆபத்து வளர்வதை மேலாண்மை செய்கின்ற பாரம்பரிய பொறிமுறைகள் இப்போது ஏதுமில்லை. வர்த்தகப்போர் பழிவாங்கும் எண்ணத்தோடு, வித்தியாசமான முறையில் வந்துள்ளது .
இத்தகைய ஆபத்தான சூழ்நிலையில் நாடுகள் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்று தோன்றுகின்றது’’ எனவும் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் பேசியபோது குத்தேரஸ் தெரிவித்திருக்கிறார்.
பலமுள்ள நாடுகளின் முன்னால் பலவீனமான அமைப்பாக நின்றிருக்கும் ஐ.நாவின் பொதுச் செயலர் சொல்வதைக் கேட்கும் நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் இல்லை.
இந்த மூன்று நாடுகளுமே பாதுகாப்புச் சபையில் வெட்டு (வீட்டோ) அதிகாரத்தைக் கொண்டவை. எனவே தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற வகையில் அவற்றின் செயற்பாடுகள் தொடரவே செய்யும். அதன் வழி புதிய உலக ஒழுங்கு ஒன்றும் உருவாக்கப்படும்.
இந்தப் புதிய உலக ஒழுங்கு, பனிப் போர் ஒழுங்கு புவிசார் அரசியலில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் அது இலங்கை அரசியலில் செலுத்தப்போகும் செல்வாக்கு என்பவற்றைக் கணித்து, அதனைத் தெளிவாகக் கையாண்டு எப்படித் தமிழர்கள் தமது நலன்களைப் பேணிக்கொள்ளப் போகிறார்கள் என்பதே நாம் இங்கு கூர்ந்து கவனிக்க வேண்டிய விடயம்.