மனைவி கண் முன்னே போன உயிர்: தாங்க முடியாமல் கதறி அழுத பெண் அமைச்சர்!

தமிழகத்தில் உயிரிழந்த நண்பரின் உடலைப் பார்த்து அமைச்சர் நிலோபர் கபில் கதறி அழுதக்காட்சி அங்கிருந்தவர்களை உருக வைத்துள்ளது.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னரசு. ஓட்டுனராக பணிபுரிந்து வரும் இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடி பெருமாள் பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியே கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்த லாரி லாரி சாலை ஓரத்திலிருந்த மின்கம்பத்தில் மோதி நின்றது.

இதில் மின்கம்பம் சரிந்து கம்பி அறுந்து பொன்னரசு மீது விழுந்துள்ளது. இதனால் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

தன் கண் முன்னே கணவர் உயிரிழந்ததைக் கண்ட சாந்தி அந்த இடத்தில் கதறி அழுதார். சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த பொலிசார் உயிரிழந்த பொன்னரசு மற்றும் சாந்தியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாந்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொன்னரசுவின் உடல் மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

பொன்னரசு, அமைச்சர் நிலோபர் கபிலின் குடும்ப நண்பராவார். அவர் இறந்த தகவல் கிடைத்ததும் உடல் வைக்கப்பட்டிருந்த பிணவறைக்கே நிலோபர் கபில் சென்றார். அங்கு பொன்னரசுவின் உடலைப் பார்த்து அமைச்சர் கதறி அழுதார். இந்தச் சம்பவத்தைப் பார்த்த அங்கிருந்தவர்களும், கண் கலங்கியுள்ளனர்.