இலங்கைக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகப் பணியாற்றிய உனா மக்கோலி திடீரென மரணமடைந்துள்ளார்.
கொழும்பில் உள்ள ஐ.நா பணியகம் இன்று அதிகாலை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அயர்லாந்தைச் சேர்ந்த 54 வயதான உனா மக்கோலி, மருத்துவ விடுமுறையில் சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் இலங்கைக்கான ஐ.நாவின் முதல் பெண் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக பணியாற்றியிருந்ததுடன், இலங்கையில் ஐ.நாவின் 21 அமைப்புகளுக்கு தலைமை தாங்கியுள்ளார்.
ஆறு ஆண்டுகள் இலங்கையில் பணியாற்றியுள்ள உனா மக்கோலி, இரண்டு ஆண்டுகள் ஐ.நா வதிவிட இணைப்பாளராகவும் மற்றும் ஐ.நா அபிவிருத்தி திட்ட பிரதிநிதியாகவும் அதற்கு முன்னர் யுனிசெப் பிரதிநிதியாகவும் கடமையாற்றியுள்ளார்.
இவர் பனாமா, டோகோ, சூடான், கென்யா, அங்கோலா போன்ற நாடுகளிலும் பணியாற்றினார்.
ஐ.நாவில் 17 ஆண்டுகள் பணியாற்றிய உனா மக்கோலி, 7 ஆண்டுகள் சிறுவர் அபிவிருத்தி தொடர்பான பணிகளில் ஈடுபட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.