தற்கொலை எண்ணங்களை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுத்த சீனா!

சீனாவில் தற்கொலை என்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. குறிப்பாக 15-34 வயது மதிக்கத்தக்கவர்கள் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனை தடுக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக புதிய செயற்கை நுண்ணறிவு செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த செயலி சமூக ஊடகங்களில் பொதுமக்கள் பதிவு செய்யும் போட்டோ, கருத்துகளை ஸ்கேன் செய்து அவர்களின் மனநிலையை புரிந்து கொள்ளும். அதன்படி 20 ஆயிரம் பயன்பாட்டாளர்களுக்கு இது குறித்த மெசேஜ் அனுப்பட்டுள்ளது.

மேலும், தற்கொலை எண்ணம் கொண்ட 4 ஆயிரம் பேர் அந்த மெசெஜ்-க்கு பதில் அளித்துள்ளனர். மேலும் 8 ஆயிரம் பேர் அதிலுள்ள ஆலோசனை கருவியை பயன்படுத்தி உள்ளது அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

இந்த அமைப்பை சீன ஆராய்ச்சியாளர் சூ டிங்ஷா உருவாக்கியுள்ளார்.

இது குறித்து பேசிய சூ, மனிதர்களுக்கு தற்கொலை எண்ணம் வரும் போது வித்தியாசமான கருத்துகளை பதிவு செய்வர். சிலருக்கு இந்த பிரச்சனை இருப்பது தெரியாது. ஆன்லைனை அதிகமாக பயன்படுத்துவது அவர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்லும். இந்த செயலி தற்கொலை எண்ணம் கொண்டவர்களுக்கு மட்டுமல்லாமல் சமூக ஊடகங்களை அதிகமாக பயன்படுத்துவர்களுக்கும் அதிகமாக பயன்படும்.

இளைஞர்களுக்கு ஆலோசனை வழங்கி தற்கொலை எண்ணத்தை தடுப்பது வழக்கமான முறையாகும். 20 சதவீதம் மக்களுக்கு மட்டுமே இது பயன்படும். சமூக ஊடகங்களின் மூலம் ஆலோசனை வழங்குவது நல்ல பலனை கொடுக்கும் என கூறினார்.