ஒரே நாளில் மூன்று வீதி விபத்துச் சம்பவங்கள் – மூவர் பலி!

மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலையில் நேற்று(23) சனிக்கிழமை இடம்பெற்ற வெவ்வேறு மூன்று வீதி விபத்துச் சம்பவங்களில் மூவர் கொல்லப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

5a3f1215da294-IBCTAMILமுன்னதாக ஏறாவூர் பொலிஸ் பிரிவில் மாவடிவெம்பு பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரத்தினபுரியிலிருந்து பாசிக்குடாவுக்கு உல்லாசப் பயணத்திற்காக வந்திருந்த குடும்பத்தினர் பயணித்த வான் ஒன்றுடன் சைக்கிளில் சென்ற வயோதிபர் மோதியதில் ஸ்தலத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

மாவடிவேம்புக் கிராமத்தைச் சேர்ந்த செல்லமணியம் ஜீவரெத்தினம் (வயது 68) என்பவரே கொல்லப்பட்டவராகும்.வான் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இதேவேளை ஏறாவூர் பொலிஸ் பிரிவு சந்திவெளி பிரதேசத்தில் இடம்பெற்ற இரண்டாவது விபத்தில் பயணிகள் பேரூந்து ஒன்றில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சகோதரர்கள் இருவர் மோதுண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளாா்.

சந்திவெளி கிராமத்தைச் சேர்ந்த நடராசா கோவிந்தன் என்ற (வயது 26) வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளாா்.

அவரது சகோதரரான நடராசா நவநீதன் (வயது 35) படுகாயமுற்ற நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை மூன்றாவதாக மாலை 6 மணியளவில் ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் டிப்பர் வாகனத்தால் மோதுப்பட்டதில் காத்தான்குடியைச் சேர்ந்த ஹமது முனீட் (வயது 19) என்ற க.பொ.த உயர்தரத்தில் கற்கும் மாணவன் கொல்லப்பட்டுள்ளார்.

காத்தான்குடியில் இருந்து ஏறாவூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது வீதியில் சைக்கிள் ஒன்றில் மோதுப்பட்டு தடக்கி வீதியில் விழுந்தபோது பின்னால் அதிவேகமாக வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனம் வீதியில் விழுந்து கிடந்த இளைஞனை மிதித்துச் சென்றுள்ளது.
இதனால் ஸ்தலத்திலேயே அவர் உயிரிழந்துள்ளாா்.

இந்த நிலையில் டிப்பர் வாகனச் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஒரே நாளில் இடம்பெற்ற இந்த மூன்று விபத்துச் சம்பவங்களிலும் மூவர் கொல்லப்பட்டமை தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.