திண்டிவனம்: திண்டிவனத்தில் உள்ள தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வீட்டில் இருந்த ஜெனரேட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மொட்டைபிள்ளை வீதியில் தமிழக சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வீடு உள்ளது. இங்கு அமைச்சரின் தாய் குமாரி (80), சகோதரர் ராஜா(45) வசிக்கின்றனர். நேற்றிரவு வீட்டின் வளாகத்தில் இருந்த ஜெனரேட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மின் இணைப்பை துண்டித்து தீயை அணைக்க முயன்றனர். தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனர். யாருக்கும் தீக்காயம் ஏற்படவில்லை.