மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை மூட முடியாது!

மாலம்பே தனியார் மருத்துவக் கல்லூரியை மூட முடியாது என அதன் தலைவர் டாக்டர் நெவில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் கூறியுள்ளார்.

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி முதலீட்டுச் சபையின் ஓர் திட்டமாகவே இந்தக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எனவே அந்த உடன்படிக்கைகளின் அடிப்படையில் எனக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ மாலம்பே தனியார் மருத்துவக் கல்லூரியை மூடிவிட முடியாது.

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை மூடினால் வேறும் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய விரும்ப மாட்டார்கள்.

இந்த மருத்துவக் கல்லூரிக்காக நான் எனது சொந்த பணத்தையே முதலீடு செய்துள்ளேன். வங்கியில் கடன் பெற்றுக்கொள்ளவில்லை.

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை மூடி விட வேண்டுமென கோரி வரும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தில் அங்கம் வகிக்கும் 50 மருத்துவர்களின் பிள்ளைகள் எனது தனியார் மருத்துவக் கல்லூரியில் கல்வி கற்று வருகின்றனர்.

நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட போதிலும் அதனை நிர்மாணிப்பதற்காக இலங்கை வங்கியிடம் பெற்றுக் கொண்ட 300 கோடி ரூபா கடன் தொகையை மீளச் செலுத்த வேண்டியுள்ளது.

மாலம்பே தனியார் மருத்துவக் கல்லூரி வருமானத்தின் ஊடாக கடன் மீளச் செலுத்த வேண்டியுள்ளது.

2010ம் ஆண்டில் மருத்துவ பேரவையினால் எமது மருத்துவ பீடத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதன் போது குறைந்தபட்ச தகுதியாக உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் இரண்டு திறமை சித்தி ஒரு சாதாரண சித்தி பெற்றுக்கொண்ட மாணவ மாணவியர் மட்டுமே பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற்றுக்கொள்ள முடியும் என அறிவித்திருந்தோம்.

இதேவேளை, தகுதி குறைந்த எவரையும் பல்கலைக்கழகத்தில் இணைத்துக் கொண்டதில்லை என டாக்டர் நெவில் பெர்னாண்டோ கூறியுள்ளார்.