பௌத்த மதத்திற்கான முன்னுரிமை அரசியலமைப்பிலிருந்து நீக்கப்படாது: ரணில்

பௌத்த மதத்திற்கான முன்னுரிமை அரசியலமைப்பிலிருந்து நீக்கப்படாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கும் செயற்குழுவின் தலைவராக நான் இருக்கும் வரையில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கும் 9ம் சரத்து நீக்கப்படாது.

தென்னாபிரிக்க அரசியலமைப்பு நிபுணர்களுடன் அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றின் போது 9ம் சரத்தை நீக்குவதாக ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை.

குறித்த தினத்தில் அவ்வாறான ஆவணங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆவணங்களை பரிசீலனை செய்ததன் பின்னரே நான் இதனைக் குறிப்பிடுகின்றேன்.

அரசியலமைப்பின் ஊடாக பௌத்த மதத்திற்கு உண்டான முன்னுரிமையை ரத்து செய்ய அனுமதியளிக்கப்பட முடியாது.

அரசியலமைப்பு உருவாக்கச் செயற்குழுவின் தலைமைப் பதவியை நான் வகிக்கும் வரையில் பௌத்த மதத்திற்கு உண்டான முன்னுரிமையில் மாற்றம் இருக்காது.

எனினும் சியம் பீடம் மற்றும் மல்வத்து பீடங்களை உடைப்பதாக கடந்த காலங்களில் சிலர் எச்சரிக்கை விடுத்த போது அதற்காக எவரும் குரல் கொடுக்கவில்லை என்பதனை நினைவுபடுத்துகின்றேன்.

பௌத்த மதத்திற்கான முன்னுரிமையை ரத்து செய்யுமாறு எவரும் இதுவரையில் கோரவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.