யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் உயிரிழப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான 5 பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் யாழ். நீதிமன்றில் இன்று குறித்த 5 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிணை கோரிக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, இந்த விசாரணையில் அவசியமற்ற வகையில் மேல் நீதிமன்றம் தலையிட மாட்டாது எனவும் இதுவரை புலன் விசாரணைகள் நிறைவுபெறாமையினால் துப்பாக்கிகள் தொடர்பான இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கை கிடைக்கப்பெறவில்லை எனவும் நீதிபதி இளஞ்செழியன் சுட்டிக்காட்டி பிணை கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் சார்பாக, அவர்களின் மனைவிமார், உறவினர்கள் மூலமாக தாக்கல் செய்யப்பட்ட பிணை கோரிக்கை மீதான விசாரணையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி வரை யாழ். மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கடந்த 2016ம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 19ம் திகதி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, அவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.