நேற்றைய தினம் (05.07.2017) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுடன் கூடவே இருந்து அவர்கள் பேசியதை மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்கு காட்டிக்கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் இடமாற்றம் குறித்து பேசுவதற்கு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைத்த எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
குறித்த சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன், யோகேஸ்வரன், வியாளேந்திரன் ஆகியோர் கூடவே இருந்துள்ளனர்.
குறித்த சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் இடமாற்றம் குறித்து பேசப்பட்டு சில முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில் சந்திப்பு நிறைவடைந்துள்ளது.
இதேவேளை சந்திப்பு நிறைவடைந்து சில நிமிடங்களுக்குள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தொலைபேசியில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் இடமாற்றம் குறித்து பேச வேண்டும் அதற்கான நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டுள்ளார்.
நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் சம்பந்தன் அவர்களுக்கும் அமைச்சர் அவர்களுக்கும் இடையே நடந்த கலந்துரையாடல் குறித்து சில நிமிடங்களுக்குள் அரசாங்க அதிபருக்கு தகவல் பரிமாறப்பட்டு அதை அரசாங்க அதிபர் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் கூறி அது குறித்து பேச ரவூப் ஹக்கீம் அமைச்சரிடம் நேரம் ஒதுக்கி தர சொல்லியுள்ளார்.
என்றால் அந்த இடத்தில் பேசியதை உடனடியாக அரசாங்க அதிபருக்கு தெரிவித்தது யார்? சந்திப்பு நடந்து சில மணி நேரங்களுக்குள் தகவல் சென்றுள்ளது சந்திப்பில் இருந்தவர்கள் வெளியேற முன் அங்கு பேசிய விவரம் எவ்வாறு அரசாங்க அதிபருக்கு சென்றது? என்பது குறித்து சந்திப்பில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அங்கிருந்தவர்களில் யார் அரசாங்க அதிபரிடம் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனை காட்டிக்கொடுத்தார்கள்.
யார் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற சந்தேகத்துடன் வெளியேறியுள்ளனர்.
இதேநேரம் கடந்த முறை அரசாங்க அதிபர் இடமாற்ற கடிதத்தில் கையொப்பம் இட மறுத்த நாடாளுமன்ற உறுப்பினர் மீதே சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு அரசியல் தலைமைகள் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.