2-வது ஒருநாள் கிரிக்கெட்: ஜிம்பாப்வேயை நசுக்கியது இலங்கை

இலங்கை – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி காலேயில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஜிம்பாப்வே அணியின் மசகட்சா, மிர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கடந்த போட்டியில் சதம் அடித்த மிர் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். அடுத்து வந்த எர்வின் 22 ரன்னிலும், தொடக்க வீரர் மசகட்சா 41 ரன்னிலும், வில்லியம்ஸ் 13 ரன்களிலும் ஆட்டம் இழந்தார்.

அதன்பின் ஜிம்பாப்வே விக்கெட்டுக்கள் சீரான இடைவெளியில் விழுந்தது. கடைசி மூன்று விக்கெட்டுக்களையும் ஹாட்ரிக் மூலம் அறிமுக வீரர் வனிது ஹசரங்கா டி சில்வா வீழ்த்தி ஜிம்பாப்வே 33.4 ஓவர்கள் மட்டுமே சமாளித்து 155 ரன்னில் சுருண்டது.

பின்னர் 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணியின் டிக்வெல்லா, குணதிலகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். குணதிலகா 8 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மெண்டிஸ் 0 ரன்னிலும், தொடக்க வீரர் டிக்வெல்லா 35 ரன்னிலும் வெளியேறினார்கள்.


ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஹசரங்கா

4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த உபுல் தரங்கா – மேத்யூஸ் அணியை வெற்றி நோக்கி அழைத்து சென்றனர். குறிப்பாக தரங்கா சிறப்பாக விளையாட இலங்கை 30.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தரங்கா 86 பந்தில் 75 ரன்களும், மேத்யூஸ் 35 பந்தில் 28 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 10 ஓவர்கள் வீசி நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்திய இலங்கை சுழற்பந்து வீச்சாளர் சண்டகன் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

காலேயில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை நிர்ணயித்த 317 ரன்களை விரட்டிப்பிடித்து ஜிம்பாப்வே அபார வெற்றி பெற்றது. தற்போது அந்த தோல்விக்கு இலங்கை அணி பழிதீர்த்துள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி மூலம் 1-1 என சமநிலையில் உள்ளது. 3-வது போட்டி 6-ந்தேதி ஹம்பன்டோடாவில் நடக்கிறது.