மாணவர் சேர்க்கையை நிறுத்த தனியார் மருத்துவ கல்லூரிக்கு அழுத்தம்

இலங்கையின் முதலாவது தனியார் மருத்துவக் கல்லூரியான சயிட்டம் மாணவர்களை சேர்த்துக்கொள்வதை தற்காலிகமாக நிறுத்த வேண்டுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதே போல மருத்துவ பட்டங்களை வழங்குவதையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அந்தக் கல்லூரிக்கு அரசாங்கம் விடுத்துள்ள உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சயிடம் தனியார் மருத்துவ கல்லூரியை மூட வலியுறுத்தி அரச பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த சில மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தற்கு ஆதரவாக அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கமும் கடந்த வாரம் மூன்று நாள் தொடர்ச்சியாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது.
இந்த தனியார் மருத்துவ கல்லூரியினால் வழங்கப்படும் கல்வி தரம் குறைவாக காணப்படுவதால் அதனை மூடிவிட வலியுறுத்தி இந்த போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் பின்னர் அரச மருத்துவ சங்க உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் சிறப்பு பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தினர்.

அதன்படி சயிடம் கல்லூரி வழங்குகின்ற மருத்துவ பட்டத்தின் தரத்தை மேம்படுத்தக் கூடிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஜனாதிபதி உறுதிமொழி வழங்கியதாக இந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டாக்டர். நவின் டி. சொய்சா தெரிவித்திருந்தார்.
அதன் பின்னர்தான், ஜனாதிபதி செயலகம் சயிடம் கல்லூரி மீது இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.