யாழ்.போதனா வைத்தியசாலையில் பெளத்த பிக்குமார் இரத்ததானம்

கொழும்பிலிருந்து வருகை தந்த சுனேத்திரா மஹாதேவி பிரிவெனாவைச் சேர்ந்த 80 க்கும் அதிகமான பெளத்த துறவிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் இரத்ததானம் செய்துள்ளனர்.

சுனேத்திராதேவி பிரிவெனா ரஜமஹா விகாரை விகாராதிபதி பேராசிரியர் மெடகொட அபயதிஸ்ஸ தேரரின் தலைமையில் மேற்குறித்த பெளத்த துறவிகள் வருகைதந்தனர்.இவ்வாறு வைத்தியசாலைக்கு விஜயம் செய்து இவ் இரத்ததானம் செய்திருந்த நிலையில் பின்னர் மத வழிபாட்டிலும் ஈடுபட்டனர்.

இதன் போது கருத்து தெரிவித்த பௌத்த துறவி, யாழ்ப்பாணத்தில் குருதிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது என்ற தகவலால் நல்லிணக்க அடிப்படையில் இக் குருதிக் கொடை நிகழ்வை செய்கின்றோம்.

நல்லிணக்கம் என்ற பெயரில் இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துவதற்கு சிலர் செயற்பட்டு வருகின்றனர்.

தமிழ் சிங்கள மக்கள் பல சகாப்தங்களாக ஒற்றுமையாக வாழ்ந்து வருபவர்கள். சகல இனங்களும் ஒற்றுமையாக நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்றார்.