வங்கதேச நிலச்சரிவில் 135 பேர் பலி; பலர் காணவில்லை

வங்கதேசத்தின் பெருமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 135 பேராவது கொல்லப்பட்டனர். பலர் காணாமல் போயிருக்கிறார்கள். மோசமான காலநிலை காரணமாக மீட்பு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
வங்கதேச மலைப்பிராந்தியங்களில் வாழ்பவர்களுக்கு நிலச்சரிவு என்பது மிகப்பெரிய உயிராபத்தாக அமைந்தது.
சமீபத்திய பெருமழையின்போது நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் பலர் நிலச்சரிவில் புதையுண்டுபோயினர்.
ரங்கமதி பந்தர்பான் மற்றும் சிட்டகாங் மாவட்டங்கள் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
மீட்புப்பணிக்காக அனுப்பப்பட்ட இராணுவத்தின் நான்கு சிப்பாய்களும்கூட நிலச்சரிவுக்கு பலியாயினர்.
தொடர்ந்தும் நிலச்சரிவுகள் நிகழலாம் என்கிற அச்சம் காரணமாக மலையடிவாரத்தில் வாழும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி பணிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பெருமழையால் வங்கதேசத்தலைநகர் தாகாவிலும் முக்கிய துறைமுக நகரான சிட்டகாங்கிலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.