தண்ணீர் கிடைக்காததால் சகாரா பாலைவனத்தில் 44 பேர் தாகத்தால் பலி

ஆப்பரிக்க நாடுகளில் இருந்து வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் பலர் தஞ்சம் அடைந்து வருகின்றனர். மத்திய தரைக் கடலில் பயணம் செய்வதற்கு முன்பாக இவர்கள் உலகின் மிகப் பெரிய சகாரா பாலை வனத்தை கடந்து லிபியா வருகிறார்கள்.

அங்கு படகுகளை வாடகைக்கு பிடித்து ஐரோப்பிய நாடுகளை சென்றடைகின்றனர். படகு பயணத்தின் போது கடலில் மூழ்கி உயிரிழக்கின்றனர்.

அதற்கு முன்னதாகவே சிலர் சகாரா பாலைவனத்தை கடக்கும் போதே குடிக்க தண்ணீர் கிடைக்காமல் தாகத்தால் உயிரை விடுகின்றனர். இச்சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

அகதிகள் சிலர் ஒரு லாரி மூலம் சகாரா பாலை வனத்தை கடந்து கொண்டி ருந்தனர். அப்போது நடு வழியில் லாரி பழுதடைந்து நின்றுவிட்டது. அதை தொடர்ந்து லாரியில் வந்தவர்கள் நடைபயணம் மேற் கொண்டனர். அப்போது குடிக்க தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே நடக்க முடியாமல் தாகத்தில் தவித்த 44 பேர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தனர்.

இந்த தகவலை நடந்து வந்த உயிர் பிழைத்த 6 பெண்கள் தெரிவித்தனர். இவர்கள் நைஜர் நாட்டில் திர்கு பகுதியில் உள்ள மிகவும் உள்ளடங்கிய கிராமத்துக்கு வந்தடைந்தனர்.

பலியானவர்களில் ஏராளமானோர் குழந்தைகள் என்றும் தெரிவித்துள்ளனர். பொதுவாக கானா மற்றும் நைஜீரியாவை சேர்ந்தவர்கள்தான் பெரும்பாலும் சகாரா பாலைவனத்தை கடந்து லிபியாவுக்கு சென்று அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.