ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் மஹிந்த அணிக்கு இல்லை!

இந்த ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு மஹிந்த அணி ஒரு போதும் சதி செய்யவில்லை என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

2020 வரை ஆட்சியைப் பிடிக்கும் எண்ணம் எமக்கு அறவே இல்லை என்பதால் அந்த வருடம் நெருங்கும் வரை நாம் எதிர்க்கட்சியாகவே இருப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

2020 வரை ஆட்சியைக் கைப்பற்றும் வாய்ப்புகள் எமக்கு அறவே கிடைக்காது. 2020 வரை எதிர்க்கட்சியாக இருக்கவே நாம் விரும்புகின்றோம்.

ஆனால், ரவி கருணாநாயக்க நிதி அமைச்சராக இருந்திருந்தால் இந்த வருடமே நாம் ஆட்சியைப் பிடித்திருப்போம்.

நாம் இந்த ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு சதி செய்யவில்லை. இந்த அரசு தான் 2020 வரை ஆட்சியில் இருக்க வேண்டும். அப்போது தான் 2020 இற்குப் பின் இலகுவாக எம்மால் ஆட்சியைக் கைப்பற்ற முடியும்.

ஜனவரி 8 ஆம் திகதி இந்த நாட்டு மக்கள் இந்த அரசுக்கு வழங்கிய ஆணையை அரசு நிறைவேற்றினால் இந்த அரசுடன் நாம் சண்டை பிடிக்கமாட்டோம்.

இந்த அரசுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகள் இருப்பதை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். இந்த அரசைக் கொண்டு நடத்தும் இரு பிரதான கட்சிகளிடையேயும் ஒற்றுமை இல்லை. ஒன்றை ஒன்று விமர்சித்துக் கொண்டே இருக்கின்றது.

இதனால் இந்த அரசு ஸ்திரமற்ற அரசாக மாறிவிட்டது. இதனால் தான் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கு வந்து முதலீடு செய்வதற்கு தயங்குகின்றார்கள்.

இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு சென்று முதலீடு செய்கின்றனர். ஸ்திரமற்ற அரசியல் நிலவும் நாட்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஒரு போதும் முதலீடு செய்யமாட்டார்கள். முதலில் ஆட்சியை ஸ்திரப்படுத்துங்கள்.

எமது ஆட்சியில் காணப்பட்ட முதலீடு இந்த ஆட்சியில் கடந்த இரண்டு வருடங்களில் 50 வீதமாகக் குறைவடைந்துள்ளது என மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் குறிப்பிட்டுள்ளார்.