தரமற்ற முருக்கு கம்பிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை முற்றுகையிடுவதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
கஹதுடுவ பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் இந்த முருக்கு கம்பிகள் இரவு நேரத்தில் நீர்கொழும்பு பகுதியில் உள்ள களஞ்சியசாலை ஒன்றுக்கு கொண்டு செல்லப்படுவதாக அதிகாரிகளால் இதன்போது கண்டறிந்துள்ளனர்.
அதன்படி, விசாரணை அதிகாரிகள், குறித்த உற்பத்தி நிறுவனத்திலிருந்து இரவு நேரத்தில் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றை பின்தொடர்ந்து, கடந்த 06ஆம் திகதி அந்தக் களஞ்சியசாலையை முற்றுகையிட நடவடிக்கை எடுத்தனர்.
அப்போது, அந்த இடத்தில் சுமார் 400 தொன் என மதிப்பிடப்பட்ட முருக்கு கம்பிகள் களஞ்சியசாலையில் இருப்பது கண்டறியப்பட்டதுடன், இந்தப் பொருட்களின் சந்தை மதிப்பு 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதன்படி, இந்த முற்றுகை தொடர்பாக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் B அறிக்கை மூலம் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அடுத்தக்கட்ட விசாரணைகளுக்குப் பின்னர் வழக்கு தொடரப்படவுள்ளதாக அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளது.