கும்பிளே, விராட்கோலி இடையே கருத்து வேறுபாடு: இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் சமரச முயற்சி

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கும்பிளேவின் பதவி காலம் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியுடன் முடிவடைகிறது. அவர் தொடர்ந்து அந்த பதவியில் நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய பயிற்சியாளர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

பயிற்சியாளர் கும்பிளே, கேப்டன் விராட்கோலி இடையிலான கருத்து வேறுபாடு காரணமாகவே புதிய பயிற்சியாளர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானதாக செய்திகள் வெளியாயின. கும்பிளே ஒரு தலைமை ஆசிரியர் போல் வீரர்களிடம் கண்டிப்புடன் நடந்து கொள்வதாகவும், ஆடும் லெவன் வீரர்கள் தேர்வு விஷயத்தில் கோலிக்கும், அவருக்கும் மோதல் போக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சாம்பியன்ஸ் கோப்பை போட்டி இன்று தொடங்கும் நிலையில் கும்பிளே, விராட்கோலி இடையிலான விரிசல் அணியின் செயல்பாட்டை பாதிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அஞ்சுகிறது. இதைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அமிதாப் சவுத்ரி, பொதுமேலாளர் ஸ்ரீதர் ஆகியோர் இங்கிலாந்து சென்று கும்பிளே மற்றும் விராட்கோலியை தனித்தனியாக சந்தித்து பேசி சமரச முயற்சியில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.