தென்ஆப்பிரிக்க அணியிடம் கண்ட தோல்வி சரியான பாடம்: இங்கிலாந்து கேப்டன் இயான்மோர்கன்

இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டனில் நேற்று முன்தினம் நடந்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 5 ஓவர்களில் 20 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியதுடன், 31.1 ஓவர்களில் 153 ரன்னில் சுருண்டது. தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் ரபடா 4 விக்கெட்டும், பார்னல், மகராஜ் தலா 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 28.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் 2 ஆட்டத்திலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றினாலும், கடைசி ஆட்டத்தில் கண்ட மோசமான தோல்வி இங்கிலாந்து அணிக்கு பேரிடியாக கருதப்படுகிறது. சாம்பியன்ஸ் கோப்பை போட்டி நாளை தொடங்கும் நிலையில் சொந்த மண்ணில் இங்கிலாந்து அணி சந்தித்த தோல்வி விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

தோல்வி குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் கருத்து தெரிவிக்கையில், ‘இந்த தோல்வி எங்கள் பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்களுக்கு சரியான பாடமாகும். எங்கள் பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக பந்து வீச வேண்டும். அதேபோல் பேட்ஸ்மேன்களும் நிலைத்து நின்று விளையாட வேண்டும். தென்ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. அதேநேரத்தில் எங்கள் அணியினர் முயற்சி செய்வதற்கு வழி இல்லாமல் போனது’ என்றார்.

வெற்றிக்கு பிறகு தென்ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் ரஸ்செல் டோமிங்கோ அளித்த பேட்டியில், ‘எல்லா சர்வதேச போட்டிகளும் முக்கியமானது. நாங்கள் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தாலும் அல்லது 0-2 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தாலும், ஒரே மாதிரியான ஆர்வத்துடன் போட்டியை வெல்ல முயற்சிப்போம்.

சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு முன்பாக நடந்த இந்த போட்டி தொடரில் எங்கள் அணி சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது எங்களது நம்பிக்கையை அதிகரிக்கும். சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் நாங்கள் வலுவான அணியாக களம் காண்பதாக நான் கருதுகிறேன். எங்கள் அணியில் சிறந்த வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். நன்றாக விளையாடினால் இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெறுவோம்’ என்று தெரிவித்தார்.