முதல் தர கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பளத்தை உயர்த்த வேண்டும்: ஹர்பஜன்சிங் வேண்டுகோள்

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம் சமீபத்தில் கொண்டுவரப்பட்டது. இதில் வீரர்களுக்கான ஊதியம் உயர்த்தப்பட்டது. இதில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியினரை, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கும்பிளே வருகிற 21-ந் தேதி சந்தித்து அறிக்கை அளிக்க இருக்கிறார். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு வரும் சீனியர் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், கும்பிளேவுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

அதில், ‘உள்ளூர் முதல் தர போட்டியில் விளையாடும் வீரர்களுக்கான ஊதியம் மிகவும் குறைவாக இருக்கிறது. இதனை வைத்து கொண்டு வீரர்கள் குடும்பத்தை கவனிப்பது சிரமமானது. எனவே முதல் தர போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை அதிகரிக்க, இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டிக்கு நீங்களும், சீனியர் வீரர்களும் பரிந்துரை செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.