2019 உலகக்கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு: டு பிளிசிஸ் சூசக தகவல்

தென்ஆப்பிரிக்க டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் டு பிளிசிஸ். முன்னணி பேட்ஸ்மேன் பணியுடன், பீல்டிங்கிலும் சிறந்து விளங்கக்கூடியவர். 32 வயதாகும் இவர் 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக சூசகமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டு பிளிசிஸ் கூறுகையில் ‘‘நான் உள்பட மூத்த வீரர்கள் 2019-ம் ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை தொடருடன் விடைபெற வாய்ப்புள்ளது. அதுவரை அனைத்து வகை கிரிக்கெட் தொடரிலும் நான் விளையாடுவேன். அதன்பின் எனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து அறிவிப்பேன்’’ என்றார்.

தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி பேட்ஸ்மேனான ஏபி டி வில்லியர்ஸ் முதுகுவலி காரணமாக டெஸ்ட் போட்டியில் பங்கேற்காமல் இருக்கிறார். 2019 உலகக்கோப்பையை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளார். உலகக்கோப்பை தொடருக்குப்பின் அவர் ஓய்வு பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் டு பிளிசிஸ் யாருடைய பெயரையும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.