பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது மத்திய அரசாங்கத்தை பொறுத்தது: பிசிசிஐ

இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் உலகளவில் பிரசித்து பெற்றது. கடந்த 2008-ம் ஆண்டு தீவிரவாதிகள் மும்பையில் நடத்திய தாக்குதலுக்குப்பிறகு இரு அணிகளுக்கு இடையில் முழு கிரிக்கெட் தொடர் நடைபெற்றது கிடையாது. 2012-ம் ஆண்டு இரண்டு டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மட்டுமே நடைபெற்றது.

இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் எவ்வளவு முயற்சி செய்தும் கிரிக்கெட் தொடர் நடப்பதற்கான வாய்ப்பு கிட்டவில்லை. இறுதியாக பாகிஸ்தான் – இந்தியா கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில் இரு அணிகளும் 2015-ல் இருந்து ஆறு தொடர்களில் விளையாட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

ஆனால் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா விளையாடுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால் தொடர் கைவிட்டு போனது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால், இந்திய அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் எங்களால் விளையாட முடியாது என்று பிசிசிஐ திட்டவட்டமாக கூறிவிட்டது.

இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் இழப்பீடு தர வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு நோட்டீசும் அனுப்பியுள்ளது. இந்த சூழ்நிலையில், நேற்று பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நோட்டீஸ் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் அமிதாப் சவுதரி கூறுகையில் ‘‘புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பது ஒரு கடிதம்தான். அது ஒப்பந்தம் அல்ல. ஆகையால் அதுகுறித்து எந்த பிரச்சினையும் இல்லை. பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது மத்திய அரங்சாங்கத்தை சார்ந்தது’’ என்றார்.

இதனால் மத்திய அரசின் அனுமதி கிடைத்தால் மட்டுமே இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெறும் என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.