இங்கிலாந்தில் அடுத்த மாதம் 1-ந்தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமிக்கு இடம் கிடைத்துள்ளது.
2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியா – நியூசிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில்தான் மொகமது ஷமி கடைசியாக பங்கேற்றார். காலில் ஏற்பட்ட காயத்துடன் பிசிசிஐ அவரை விளையாட வைத்தது. இதன் காரணமாக உலகக்கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த பின்னர், காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். உலகக்கோப்பை தொடரில் 17 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தியிருந்தார்.
அறுவை சிகிச்சையால் சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஓய்வில் இருந்த பின்னர் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரின்போது இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார். அதன்பின் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பிடித்தார். ஒருநாள் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம்பிடித்திருந்த ஷமிக்கு 3-வது போட்டியின்போது காயம் ஏற்பட்டது. இதனால் 4-வது மற்றும் ஐந்தாவது போட்டியில் அவர் பங்கேற்கவில்லை.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் அவர் விளையாடவில்லை. சுமார் இரண்டு வருடம் மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கிறார்.
சுமார் 27 மாதங்கள் கழித்து ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பிடித்தது குறித்து மொகமது ஷமி கூறுகையில் ‘‘ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் சுமார் இரண்டு ஆண்டுகள் இடம்பெறாதது நீண்ட இடைவெளியாகும். இந்த இரண்டு வருடங்களும் நான் பிட்னெஸ் மற்றும் பந்து வீச்சின் பலத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்தினேன்.
மேலும் என்னுடைய பலவீனமான உடல் எடையை குறைப்பதற்கான வேலையில் ஈடுபட்டேன். எனது எடையை குறைத்து ஒல்லியானேன். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. என்னுடைய சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்த விரும்புகிறேன்’’ என்றார்.