மர்மமாக இறந்த நடிகர் கலாபவன்மணி வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கேரள ஐகோர்ட்டு உத்தரவு

கேரள திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் கலாபவன் மணி. இவர் கொச்சியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 6-ந்தேதி மர்மமான முறையில் இறந்தார்.

இதபற்றி கேரள போலீசார் விசாரணை நடத்தினர். அவரது சாவில் மர்மம் இருப்பதாக மனைவி மற்றும் உறவினர்கள் புகார் கொடுத்தனர். அதன் பேரில் கலாபவன் மணியின் உடல் உறுப்புகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் பூச்சிக்கொல்லி மருந்து இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென கலாபவன் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார். இதுபற்றி மாநில அரசுக்கும் மனு கொடுத்தார். இது தொடர்பாக சி.பி.ஐ. தரப்பில் கூறும்போது, தங்களுக்கு ஏராளமான வழக்குகளின் விசாரணை நிலுவையில் இருப்பதால் இப்போது இந்த வழக்கை விசாரிக்க இயலாது என்று தெரிவித்தனர்.

இதையடுத்து கலாபவன் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன், கேரள ஐகோர்ட்டில் மனு செய்தார். அதில், கலாபவன் மணி மரணத்தில் ஏராளமான மர்மங்கள் உள்ளது. அவர் இறந்து ஓராண்டு முடிந்த பின்பும் இதுவரை விசாரணை முழுமை பெறவில்லை. குற்றவாளிகளும் கண்டுபிடிக்கப்படவில்லை.எனவே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிடவேண்டும் என்று கோரி இருந்தார்.

மனுவை விசாரித்த ஐகோர்ட்டு இன்று கலாபவன் மணி வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்தது. ஒரு மாதகாலத்திற்குள் வழக்கின் ஆவணங்களை பெற்று விசாரணையை தொடங்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளது.