ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூருக்கு எதிராக 62 ரன்கள் விளாசிய ஐதராபாத் வீரர் யுவராஜ்சிங், அடுத்து வரும் ஆட்டங்களிலும் அதிரடி தொடரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. ஐதராபாத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை வீழ்த்தியது. இதில் யுவராஜ்சிங் (62 ரன், 27 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) ஹென்ரிக்ஸ் (52 ரன்) ஆகியோரின் அரைசதங்களின் உதவியுடன் ஐதராபாத் அணி நிர்ணயித்த 208 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணி 19.4 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக கிறிஸ் கெய்ல் 32 ரன்களும், கேதர் ஜாதவ் 31 ரன்களும் எடுத்தனர்.
23 பந்துகளில் அரைசதத்தை கடந்து அசத்திய ஐதராபாத் அணி வீரர் 35 வயதான யுவராஜ்சிங் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எங்கள் அணியில் அனைத்து பேட்ஸ்மேன்களின் பங்களிப்பும் சிறப்பாக இருந்தது. பந்து வீச்சாளர்களும் தங்கள் பணியை கச்சிதமாக செய்தனர். இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. உள்ளூரில் மேலும் புள்ளிகளை எடுக்க வேண்டியது அவசியம். சொந்த ஊரில் நடக்கும் 7 ஆட்டங்களில் 5-ல் வெற்றி பெற்றால், அது அடுத்த சுற்றை எட்டுவதற்கு உதவிகரமாக இருக்கும்.
இந்த ஆட்டத்தில் பேட்டிங்கில் அனுபவித்து விளையாடினேன். கடந்த சில ஆண்டுகளாக எனது பேட்டிங்கில் ஏற்றமும் இறக்கமும் கண்டு வருகிறேன். ஆனால் உண்மையிலேயே தற்போது மிக நல்ல மனநிலையில் இருப்பதாக உணருகிறேன். இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியதும் (கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடினார்) அதற்கு ஒரு காரணம். இதனால் என்னால் நெருக்கடியின்றி இயல்பாக விளையாட முடிந்தது. இந்திய அணிக்குள் மறுபிரவேசம் செய்ய முயற்சிக்க வேண்டும் என்ற கவலை இப்போது இல்லை. களம் இறங்கி சூழ்நிலைக்கும், எனது திறமைக்கும் தகுந்தபடி ஆடுகிறேன்.
ஐதராபாத் எனக்கு எப்போதும் ராசியான இடம். இங்கு நிறைய ரன்கள் குவித்த போது தான், நான் இந்திய அணிக்கு மறுபடியும் அழைக்கப்பட்டேன். எனது பேட்டிங் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பார்மை அடுத்து வரும் போட்டிகளுக்கும் கொண்டு செல்வேன் என்று நம்புகிறேன்.
இவ்வாறு யுவராஜ்சிங் கூறினார்.
ஐதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானை சேர்ந்த இளம் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் (2 விக்கெட்) தனது முதல் ஐ.பி.எல். ஆட்டத்திலேயே அருமையாக பந்து வீசி இருக்கிறார். அவர் ஒரு திறமையான பவுலர். அவருக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது.
யுவராஜ்சிங் விளையாடிய விதத்தை பார்க்க சூப்பராக இருந்தது. அந்த மாதிரி அவர் விளையாடுவதைத் தான் நான் வழக்கமாக டி.வி.யில் பார்த்து ரசிப்பேன். அவரது ஷாட்டுகள் பிரமாதமாக இருந்தன. அவரது ரன்வேட்டை தொடர வேண்டும் என்று விரும்புகிறோம். இந்த தொடரில் இன்னும் 5 அல்லது 6 முறை இவ்வாறு நிலைத்து நின்று அவர் அதிரடி காட்டினால் போதும். நாங்கள் எளிதாக இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதுடன், கோப்பையையும் வென்று விடுவோம்’ என்றார்.