ஐ.பி.எல்: ரகானே, ஸ்மித் அதிரடியால் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் புனே வெற்றி

ஐ.பி.எல். தொடரின் 2-வது நாள் நடந்த ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் , மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் புனே அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றிப்பெற்றது.

புனேவில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனே அணித்தலைவர் ஸ்மித் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

அதன் படி முதலில் களமிறங்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, பாண்டியாவின் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 184 ஓட்டங்கள் குவித்தது.

அசோக் டிண்டா வீசிய கடைசி ஓவரை சந்தித்த ஹர்திக் பாண்டியா, 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விலாசி 14 பந்துகளில் 35 ஓட்டங்கள் எடுத்தார்.

புனே அணி சார்பில் இம்ரான் தாஹிர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

185 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய புனே அணியின் துவக்க ஆட்டக்காரரான அகர்வால் 6 ஓட்டங்களில் வெளியேறினார். ரஹானே 34 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரி விலாசி 60 ஓட்டங்கள் குவித்து வெளியேறினார்.

ரஹானேவை தொடர்ந்து களமிறங்கிய ஸ்டோக்ஸ் 14 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 21 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய டோனி, மறுமுளையில் அரைசதம் கடந்து அதிரடியாக விளையாடிய ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினார்.

கடைசி ஆறு பந்துகளுக்கு 13 ஓட்டங்கள் தேவை என்ற பரபரப்பான கட்டத்தில் போலார்டு கடைசி ஓவரின் முதல் மூன்று பந்துகளுக்கு தலா ஒரு ஓட்டம் என 3 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து புனே அணிக்கு நெருக்கடி கொடுத்தார்.

எனினும், அடுத்த இரண்டு பந்துகளை தொடர்ந்து சிக்ஸர்களுக்கு பறக்கவிட்ட ஸ்மித் மும்பை அணியின் வெற்றி கனவை சிதைத்தார். இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்திய புனே அணி 10வது ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.