வேட்புமனு தாக்கலில் பதற்றத்தில்தான் என் பெயரை தீபா குறிப்பிடவில்லை…. மாதவனின் அடடே விளக்கம்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கலின்போது பதற்றத்தின் காரணமாகவே தீபா தமது பெயரை குறிப்பிடாமல் விட்டுவிட்டார். இதை பெரிதுப்படுத்த வேண்டாம் என்று தீபாவின் கணவர் மாதவன் கேட்டுக் கொண்டார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலாவின் தலைமையை ஏற்க விரும்பாத சிலர் திநகரில் உள்ள தீபாவின் இல்லத்தில் திரண்டனர். இந்நிலையில் சசிகலா அணியிலிருந்து ஓபிஎஸ் பிரிந்து வந்தவுடன் அவருடன் தீபா செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவின் போது எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற ஒரு அரசியல் அமைப்பை தொடங்கினார். மேலும் கட்சியின் கொடியையும் வெளியிட்டார் தீபா.

இந்நிலையில் நிர்வாகிகள் தேர்வில் குளறுபடி, மக்களிடம் ஆதரவு கோருவதில் சுணக்கம் உள்ளிட்ட காரணங்களால அதிருப்தியில் இருந்த தீபா ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் பேரவையை கூண்டோடு கலைத்து விட்டு ஓபிஎஸ் அணியில் இணைந்தனர்.

இந்நிலையில் தீபா பேரவையில் தீயசக்திகள் புகுந்து விட்டதால் அவரால் சுயமாக செயல்படமுடியவில்லை. இனி தீபா பேரவைக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும் தனி கட்சி தொடங்கவுள்ளதாகவும் தீபா கணவர் மாதவன், ஜெ.சமாதியில் தியானம் இருந்து விட்டு அறிவித்தார்.

பின்னர் சிறிது நாள் கழித்து தீபாவை முதல்வராக்குவதே எனது கடமை என்றும் கூறினார். இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தீபா அறிவித்திருந்தார். கடந்த வியாழக்கிழமை தீபா வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவரது கணவரின் பெயரை குறிப்பிடாமல் விட்டார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே மீண்டும் மோதல் என்று சர்ச்சை கிளம்பியது.

இந்நிலையில் திண்டுக்கல்லில் இன்று செய்தியாளர்களிடம் மாதவன் பேசுகையில், வேட்புமனு தாக்கல் செய்யும் போது ஏற்பட்ட பதற்றத்தின் காரணமாக அவர் எனது பெயரை குறிப்பிடாமல் விட்டுவிட்டார். யாருடைய தூண்டுதலின் பேரிலும் நான் தனிக்கட்சியை தொடங்கவில்லை என்றார் மாதவன்.