வடக்கு மக்களுக்கு தேவையானது இதுதான்! வடமாகாண சபை எதற்கு உள்ளது?

வடக்கு மக்களின் முக்கிய பிரச்சினையாக பல விடயங்கள் காணப்படுகின்றன. ஆனால் அவற்றை விடுத்து வேறு விடயங்கள் குறித்து வடமாகாண சபை கவனம் செலுத்துவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் அணித் தலைவர் சாந்த பண்டார குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இதை கூறினார் தொடர்ந்து தெரிவிக்கையில்,

வடக்கு மக்களின் தேவை சமஷ்டியோ அல்லது பொலிஸ் அதிகாரங்களை பெற்றுக் கொள்வது அல்ல, அவர்கள் அவற்றை கேட்கவும் இல்லை.

அவர்களுக்கு வேலைவாய்ப்பு பிரச்சினை, காணிப்பிரச்சினை, காணாமல் போன தமது உறவுகள் குறித்த பிரச்சினை, பொருளாதாரப் போன்ற பல சமூகப் பிரச்சினைகள் காணப்படுகின்றன.

இவற்றை தீர்த்து வைக்காவிடின் வடமாகாண சபை என்று ஒன்று ஏன் இருக்கின்றது? இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பு பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் வடமாகாண சபை இருந்தும் எதற்கு என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றச்சாட்டுக்களில் சர்வதேச தலையீடுகள் எதற்கும் அனுமதியில்லை என இலங்கை அரசாங்கம் தெளிவாக தெரிவித்துள்ளது.

எனினும் ஜெனிவாவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐ.நா கூட்டத்தொடருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் சென்று அங்கு மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.