எதிர்க் கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் வீட்டினை, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 15 நாட்களாக கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால், சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை இவர்கள் முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று மாலை 4.45 மணியளவில், எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தனின் வீட்டின் பிரதான வாயிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என திருகோணமலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து கருத்துரைத்துள்ள அவர்கள், கடந்த 15 நாட்களாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றோம்.
இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் எங்களுக்கு நீதியைப் பெற்றுத் தருமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இதுவரை நீண்ட நாட்களாக நடத்திவரும் போராட்டத்திற்கு எந்தத் தீர்வும் கிடைக்காத நிலையில், அவர்கள் தங்கள் போராட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.