புதன்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் கூரிய ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்த 10 பேர் கொண்ட கும்பலொன்று வீட்டிலிருந்தவர்களைத் தாக்கி பாரிய கொள்ளைச் சம்பவமொன்றில் ஈடுபட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் வயோதிப தம்பதியர்களான த.மகாதேவன் (வயது 65), அவரது மனைவி இராஜேஸ்வரி (வயது 61) ஆகிய இருவரும் வாள் வெட்டுக்களுடன் படுகாயமடைந்த நிலையில் பொது மக்களால் அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.
இது குறித்து தெரியவருவதாவது,
இவர்களின் வீட்டின் பின் பக்க கதவினை உடைத்து உள் நுளைந்த 10 பேர் அடங்கிய கொள்ளை கும்பலொன்று வீட்டிலுள்ளவர்களை தாக்கியும் வாளால் வெட்டியும் தாலிக்கொடி, சங்கிலி உட்பட 13 பவுண் தங்க நகைகளும் ஒரு தொகை பணம் மற்றும் வீட்டில் நின்ற மோட்டார் சைக்கிளையும் அபகரித்துச் சென்றுள்ளார்கள்.
சம்பவம் தொடர்பாக அச்சுவேலிப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார், விசாரணைகளை மேற்கொண் டதுடன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்கு நேற்று நண்பகல் மோப்ப நாய் சகிதம் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
அபகரித்துச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் குறித்த வீட்டில் இருந்த சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் உள்ள அடர்ந்த பற்றைக் காட்டிற்குள் உள்ள வீதியில் அநாதரவான நிலையில் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வசாவிளான் கிழக்கில் மீளக்குடியமர்த்தப்பட்டு மக்கள் சகஜ வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் குறித்த பகுதியில் நிகழ்ந்துள்ள துணிகரமான கொடூர வாள்வெட்டுடன் கூடிய கொள்ளைச் சம்பவத்தினால் அப்பகுதியில் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.