டி.ஆர்.எஸ். முறையை சுமித் தவறாக பயன்படுத்தியதால் சர்ச்சை: முன்னாள் வீரர்களின் விமர்சனம்

“நான் விளையாடிய காலத்தில் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் கிடையாது. ஆனால் சுமித்தின் செயல் விதிமுறைக்கு எதிரானது தான் என்று சந்தேகிக்கிறேன். இது நல்ல விஷயம் அல்ல. அவர் நிச்சயம் எச்சரிக்கப்படுவார்”

– ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட்.

‘கிரிக்கெட் விதிமுறைப்படி ஸ்டீவன் சுமித் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தடை விதிக்கும் வாய்ப்பு இருந்தால், அதனை செய்ய வேண்டும். போட்டி நடுவரும், கள நடுவர்களும் எதிர்காலத்தில் இது போன்று நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’

– இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி.

‘விராட் கோலி கூறியது போல் ஆஸ்திரேலியர்கள் இவ்வாறு நடந்து கொள்வது 3-வது முறையாக இல்லாமல் ஒரே முறை தான் என்றாலும் கூட இப்படி செய்திருக்கக்கூடாது என்பது தான் எனது கருத்து. கோலி கூறியது சரி எனில், டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தை அவர்கள் இந்த வகையில் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது’.

-ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்.

‘ஸ்டீவன் சுமித் என்னிடம் வந்து யோசனை கேட்ட போது நான் தான் வீரர்களின் அறையை நோக்கும்படி கூறினேன். இது முழுக்க முழுக்க என்னுடைய தவறே. இது தொடர்பான விதிமுறையை நான் அறிந்திருக்கவில்லை’.

-ஆஸ்திரேலிய வீரர் ஹேன்ட்ஸ்கோம்ப்.

இது ஒரு அற்புதமான டெஸ்டாக அமைந்தது. ஆனால் குறிப்பிட்ட ஒரு சம்பவத்தின் மீது மட்டும் கவனம் செலுத்துவது வெட்கக்கேடானது. ஸ்டீவன் சுமித் தனது தவறை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். சம்பவத்தின் போது, நடுவர்கள் தலையிட்டு பிரச்சினையை சரி செய்தனர். பெவிலியன் திரும்பியதும், சுமித் தர்மசங்கடத்திற்குள்ளாகி இருப்பார். இதில் இருந்து அவர் நிச்சயம் பாடம் கற்றுக்கொண்டிருப்பார்.

-ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக்