மூன்றாம் பாலின மாணவர்களுக்கான ஒபாமாவின் அறிவிப்பு ரத்து : அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் உள்ள பள்ளிகளில் மூன்றாம் பாலின மானவர்கள், தங்களது விருப்பப்படி ஆண்கள் அல்லது பெண்கள் கழிவறைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என முன்னாள் அதிபர் ஒபாமா கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போது அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப், மூன்றாம் பாலின மாணவர்களுக்காக ஒபாமா அரசு கொண்டு வந்த இந்தத் திட்டத்தை புதன்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். டிரம்ப்பின் இந்த புதிய உத்தரவு அமெரிக்க திருநங்கை சமுதாயத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க பள்ளிகளுக்கு, “ஒபாமாவின் உத்தரவு குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், தேவையற்ற ஒன்றாகவும் உள்ளது” என்று அமெரிக்க நீதித்துறை, பள்ளித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மூன்றாம் பாலின மாணவர்கள் வெள்ளை மாளிகை முன்பு கூடி “வெறுப்பு இல்லை, பயம் இல்லை, திருநங்கை மாணவர்கள் இங்கு வரவேற்கப்படுகிறார்கள்” என்று டிரம்ப்புக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

முன்னதாக கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்றதிலிருந்து டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

மெக்ஸிகோ எல்லையில் சுவர், குடியுரிமை கொள்கையில் மாற்றம், 7 முஸ்லிம் நாடுகளின் மீதான தடை போன்ற டிரம்ப்பின் நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் மத்தியில் எதிர்ப்புகள் எழுந்திருக்கும் நிலையில் மூன்றாம் மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் டிரம்ப் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.